தொ.ப என்ன சொல்கிறார்?
பேராசிரியர் தொ.பரமசிவன் ஐயாவின் சமயங்களின் அரசியல் என்ற நூலை வாசித்து முடித்தேன்.
இந்நூலின் கரு என்பது இந்துமதம் என இன்று அறியப்படும் வைதீக பிராமணிய மதம் எப்படி வேத வேள்விகள் மூலமும் சாதிய அடக்குமுறை மூலமும் அரசதிகாரத்தை கைக்கொண்டு சைவ வைணவ, சமண, பௌத்த சமயங்களை உட்செறித்து தன்னை நிலைநிறுத்தி தாய்த்தெய்வ வழிபாட்டை புறந்தள்ளி புராண கடவுளை புகுத்தி, தமிழக(திராவிட) மக்களை சாதியாக பிரித்து மேலாண்மை செய்தது, செய்துகொண்டு இருக்கிறது என்பதே ஆகும்.
ஒரு சிந்தனை ஒரு கருத்தியலாக உருப்பெற்று மக்கள் திரளின் ஆதரவு கொண்டு அந்தந்த காலகட்ட சமூக பொருளாதார தேவைகளை முன்வைத்து எப்படி ஒர் இயக்கமாக நிறுவனமாக பரிணாமம் பெறுகின்றன என்று ஆராம்பிக்கிறார்.
நிறுவன மயமான சமண பௌத்த சமயங்களை எப்படி பக்தி இயக்க சைவ வைணவ சமயங்கள் வீழ்த்தின என்றும்
சமண சமயம் ஏன் வலுவிழந்தது எதனால் வீழ்த்தப்பட்டது அதன் சமூக மற்றும் வாழ்வியல் சார்ந்த காரணங்கள் என்ன என்றும்
ஹரப்பா நாகரிக பாசுபத வழிபாடு காபாலிகம், காளாமுகம் என்று எப்படி சைவ மதமாக உருப்பெற்றது எனவும்
பெண்ணைத் துறத்தலே துறவு என்னும் பெண்ணுக்கு வீடுபேறு கிடைக்க பெண் மறுபிறவியில் ஆணாக பிறந்து துறவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்னும்
ஆணாதிக்க கூறுகளை கொண்ட சமணத்தை எதிர்த்து ஆணும் பெண்ணும் சமம் என்ற கோட்பாடு கொண்டு சைவம் தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டதையும்
பலியிடல் இறைச்சி நரபலி போன்ற கூறுகளை கொண்ட சைவ மதம் எப்படி சமண மதத்தில் இருந்து கிபி 7ம் நூற்றாண்டளவில் கொல்லாமை புலால் உண்ணாமையை எடுத்துக் கொண்டது என்றும்
7ம் நூற்றாண்டுக்கு பின்னான பேரரசு உருவாகத்தில் எப்படி பிராமணியமும் பிறப்பை முன்னிறுத்திய சாதியமும் தலை தூக்கியது என்றும்
வைதீக மதம் அதவாது இன்று இந்து மதம் என்று அறியப்படும் பிராமண மதம் வட நாட்டில் இருந்து வந்து தமிழ் சைவ வைணவ சமயங்களை எவ்வாறு தனக்குள் தின்று செரித்தது என்றும்
நம்முடைய நாட்டார் தாய் தெய்வ வழிபாடு மற்றும் சமண தாய்த்தெய்வ வழிபாடு எப்படி புறந்தள்ளப்பட்டது என்றும்
புறந்தள்ளப்பட்டாலும் இன்னும் அம்மன் போன்ற தாய் தெய்வ வழிபாடு உயிர்ப்புடன் இருக்க காரணம் என்ன என்பதையும்
மண் வளத்தை குறிக்கும் மூத்ததேவி என்ற நம்முடைய நாட்டார் தெய்வம், பொருள் வளம் குறிக்கும் பிராமண மத ஸ்ரீதேவியால் ஒதுக்கப்பட்டு மூதேவி என்று வசை சொல்லாக ஆக்கப்பட்டதையும்
சமண மதத்தின் வாக்தேவி அதாவது சொல்லின் தலைவி திருத்தக்கதேவர் நாமகள் என்றும் கூட தமிழ்படுத்திய சமண கடவுள்
பிராமண மதத்தால் திருடப்பட்டு பொய் புராணம் கற்பிக்கபட்டு எப்படி சரஸ்வதி ஆக்கப்பட்டாள் என்றும்
எப்படி கருவறையில் இருந்து தமிழை வெளியேற்றி வடமொழி கோயிக்குள் புகுந்தது என்றும் நம்முடைய தேவாரம் ஏன் இன்றும் கூட கோயில் கருவறையில் பாடமுடியாமல் போனது பற்றியும்
சூத்திரர்களான நமக்குத்தான் தாழ்ந்த சாதிக்காரர்கள் கல்வியும் சம்ஸ்கிருத படிப்பும் மறுக்கப்பட்டது. ஆனால் பிராமண சாதி பெண்களுக்கு ஏன் கல்வி சம்ஸ்கிருதம் மறுக்கப்பட்டது என்ற கேள்விக்கு விடை தந்தும்
கழுகுமலை முருகன் கோவில், வள்ளியூர் முருகன் கோயில் சமணர்களிடமிருந்தும்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், மதுரை அழகர் கோவில் பௌத்தர்களிடமிருந்தும் பிடுங்கபட்ட கோவில் என்றும் ஆதாரத்தோடு கூறுகிறது இந்நூல்.
இது போல் தமிழ்நாட்டில் சமண பௌத்த சமயத்தில் இருந்து திருடப்பட்டு பிராமண இந்து கோயில்களாக மாற்றப்பட்ட கோயில்கள் நிறையவே உண்டு என பேராசிரியர் ஆதாரத்தோடு அறுதியிட்டு சொல்கிறார்.
தன்னை கௌண்டிக கோத்திர பிராமணன் என்றும் கூறிக்கொண்ட திருஞான சம்பந்தரின் வேதத்தை வேள்வியை சாதிய மேலாதிக்கத்தை முதலாக கொண்ட சைவம் எவ்வாறு
"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்" என்று திருநாவுக்கரசரின் சிவனை, சாதி ஒழிப்பை, வேத மறுப்பை முதலாக கொண்ட சைவத்தால் எதிர்க்கப்பட்டது என்றும்
பிரமாணர்காளால் கையாகபடுத்தப்பட்ட சைவ மதம் எப்படி அரசு அதிகாரம் மற்றும் சாதிய சமூக மேல்நிலை அதிகாரம் கொண்டு
பெண்களை கீழ்நிலைப்படுத்தி தாசிகளாக, பணிப்பெண்களாக மாற்றியது என்பதையும், அதற்கு ராசராசன் கட்டிய பெரியகோயில் எப்படி துணை போனது என்றும்
சமண பௌத்த துறவுக்கு எதிராக இல்லறத்தை வலியுறுத்தி சைவமும், ஆண்டாள் மூலமாக வைணவமும் எப்படி மக்களை குறிப்பாக பெண்களை ஈர்த்தது என்றும்
கிராம தானம், பிரம்மதேயம், மானியங்கள் மூலம் எப்படி வைதீக பிராமணர்கள் அன்றைய பொருளாதார பெருக்கத்தை தனதாக்கி கொண்டார்கள் என்பதையும்
மக்கள் நிலத்தை பிடுங்கி வெட்டி வேலை செய்ய வைத்து பாலை இலவசமாக பெற்று கோயில் அதிகாரம் மூலம் பிராமண மதம் தன் சாதிய மேலாதிக்கத்தை கொண்டு செய்த கொடுமைகளையும்
இதை எதிர்த்து வந்த அப்பர், சித்தர்கள் போன்றோர் எதிர்குரல் எப்படி வலுவிழந்து போனது என்றும் விரிவாக அலசுகிறது இந்நூல்.
சோழ அரசின் வீழ்ச்சியும் அதன் பின்னான விஜயநகர அரசும் எப்படி வெங்கடாஜலபதி, ராமர் போன்ற இதற்கு முன் இல்லாத கோயில்களை புதிதாக கட்டியது என்றும்
"கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா" என்ற சித்தர்களின் Anti-Establishment அதாவது நிறுவன மயமாக்கலுக்கு எதிரான கோட்பாடு மேலெலும்பாது போனாலும்
சாதியை எதிர்த்த சித்தர் கோட்பாடு இஸ்லாமிய சூஃபிக்களால் எப்படி முன்னெடுக்கபட்டது என்றும்
அதனால் மதம் மாறிய மக்களின் சமூக மேம்பாட்டையும், இஸ்லாமிய மதத்தின் சாதியற்ற சமத்துவ தன்மையும் எப்படி உயர் சாதியினர் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது என்றும்
பின்னர் கிறித்தவ மதம் வந்தது, 19ம் நூற்றாண்டின் சீர்திருத்தவாதம், நீதிக்கட்சி என்று பலவற்றையும் இந்நூல் அலசுகிறது.
சுந்தர் காளி அவர்களோடு நடக்கும் உரையாடல் அடுத்த பாகமாக உள்ளது.
அறிவு செறிவு கொண்ட இந்த உரையாடலை படிக்க படிக்க தொ.ப. ஐயாவை விட சுந்தர் காளி அவர்கள் என்னை மிகவும் ஈர்த்தார்.
பல தகவல்கள் நம்மை அட என்று வாய்பிளக்க வைக்கும்.
சிவ பிராமணர் எதிர் ஸ்மார்த்த பார்ப்பனர்
சமண பௌத்தத்தில் இருந்து திருடப்பட்ட கோயில்கள் பற்றியும், களப்பிரர் பற்றியும், தாய் தெய்வ வழிபாடு பற்றியும்
மகேந்திர சதுர்வேதி மங்கலம் உழுகுடிகளாலேயே தீ வைக்கப்பட்டது, முருகு இறங்குதல், வாசலில் கோலமிடுவதன் காரணம்
மாணிக்கவாசகர் ஏன் சோழ நாட்டுக்குள் அனுமதிக்க படவில்லை, சாதியம், பிராமண பொய் புரட்டுகள் என்று ஏராளமான கருத்துகள்.
கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் இது.
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம்
விலை: ரூ.150
Comments
Post a Comment