ஆ என்பது பசுவை மட்டும் குறிக்கும் சொல்லா?
பசு மட்டுமே செல்வம் போலவும் அதை மட்டுமே அக்காலத்தில் கவர்ந்து சென்றனர் போலவும்
திராவிடரின் எருமையை கீழாகவும் இழிவாகவும் நினைத்து,
பல பேர் ஆநிரை கவர்தலில் "ஆ" என்பது பசுவை மட்டும் தான் குறிக்கிறது என்று சொல்கின்றனர்.
ஆ பற்றி நம்முடைய தொல்காப்பியம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்:
ஆ என்பது பெண்பால் விலங்கினப் பெயர் என்கிறார் ஒல்காப்புகழ் தொல்காப்பியம் தந்த தொல்காப்பியர்.
பெண்பால் என்றால் எந்த விலங்கின் பெண் பால்?
"பெற்றமும் எருமையும் மரையும் ஆவே"
தொல்: பொருள்: மரபியல்: 1560
அஃதாவது பெற்றம்(பசு), எருமை மற்றும் காட்டுப்பசுவின் பெண்பால் பெயர் ஆ என்பது ஆகும்.
ஆக, தொல்காப்பிய வழி ஆ என்பது எருமையையும் சேர்த்தே குறிக்கிறது என்பதுத் திண்ணம்.
மேலும் மற்றொரு வகையில் விளக்க வேண்டுமென்றால்,
"காரா" என்னும் சொல் எருமையைக் குறிக்கும். அதைக் கொண்டு "ஆ" என்பதில் எருமையும் அடங்கும் என்பதை இலக்கண துணை கொண்டு விளங்கப் பார்ப்போம்.
சொற்புணர்ச்சி விதி:
காரா= கார் + ஆ
கார் = கருமை என்று பொருள்.
கருமை + ஆ
கருமை என்பது நிறம் குறித்த சொல்லாதலால் பண்பில் அடங்கும்.
எனவே பண்புப் புணர்ச்சி விதிப் படி,
1) மை விகுதி கெடல் விதிப்படி,
கருமை+ ஆ= கரு+ ஆ
2) உயிர் வரின் உக்குறல் மெய் விட்டு ஓடும் விதிப்படி,
கரு(ர்+உ)+ ஆ= கர் + ஆ
3) ஆதி நீடல் விதிப்படி,
கர்+ஆ= கார்+ ஆ
4) உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே விதிப்படி,
கார்+ஆ = காரா.
காரா = கருமையான ஆ
காரா = கருப்பு நிறம் கொண்ட மாடு
காரா = எருமை
எனவே, ஆ என்பது எருமையும் ஆகும்.
ஆநிரை கவர்தலில் பசுவும் வரும் எருமையும் வரும் இன்ன பிற கால்நடைகளும் அடங்கும்.
ஆக, ஆ என்பது சிறப்புப்பெயரன்று. அது பொதுப்பெயரேயாகும்.
அப்பொதுப் பெயர் எருமை மற்றும் பசுவை குறித்தச் சொல்லேயாகும்.
இப்படிக்கு,
எருமைக்காரச்சியின் பேரனாகிய
திராவிட நந்தன்.
🔥🔥🔥
ReplyDeleteகாரா எடுத்துக்காண்டு நன்று
Deleteபடித்து கருத்திட்டமைக்கு நன்றி ஆசிரியரே.
Delete